Thursday, 14 April 2016

திரைக்கதை டிப்ஸ் - #3


இந்தமுறை ஒரு கதாபாத்திரத்தை எப்படி சுவாரஸ்யமாக அமைக்கலாம் என பார்க்கலாம்…

சினிமாவில் மட்டும் தான் , மக்கள் காசு கொடுத்து உள்ளே வந்து தான் நினைத்தது எதுவும் நடக்கக்கூடாது என ஆசைப்படுவார்கள்… அவர்கள் நினைத்த எல்லாம் நடந்தால் “ யூகிக்க கூடிய திருப்பம் , அடுத்ததை குழந்தை கூட சொல்லி விடும்” என விமர்சனங்கள் பறக்கும்…

இதை தவிர்க்க , ஒரு சீனை முற்றிலும் மாறுபட்ட ரீதியில் எடுக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அந்த கதாபாத்திரம் , இயல்பு நிலையில் இருந்து சற்றே விலகி இருந்தால் ( கவனம் : லாஜிக் பார்த்து ) பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.. சீக்கிரம் படத்தில் ஒன்றி விடுவார்கள்..

உதாரணமாக , கொம்பன் படத்தில் வந்த கார்த்திக்கும் , பருத்திவீரன் படத்தில் வந்த கார்த்திக்கும் ஏறத்தாழ ஒரேமாதிரி குணாதிசயம் இருக்கும்.  அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் கதாபாத்திரம் படைக்கபட்டிருக்கும்.. அதற்கு நிறைய  பில்ட்அப் சீன் தேவை.. அதுவே மெட்ராஸ் பட காளி யாக வந்த கார்த்திக் எப்படி ? மிக சாதாரணமாக ஒரு பாடலின் நடுவே என்ட்ரி கொடுப்பார்.. ஆனாலும் மறக்க முடியவில்லை தானே…!! அந்த கதாபாத்திர வடிவமைப்பு அப்படி.. நல்ல ரிச்சான பையன் போன்ற தோற்றம்… ஆனால் பேசுவதோ ‘ சும்மா நேத்துக்கு சுவரயே பாத்துகினு கீர ?’என்று… முரண்பாடு இருந்ததால் நம்மை அறியாமலும் ஒன்ற முடிந்தது…

அதேபோல் ஜோக்கர்… !!! குழந்தைகள் ரசிக்கும்படியாக முகத்தில் வர்ணம் பூசியபடி வித்தியாசமான உடல்மொழியோடு ஒரு கதாபாத்திரம்… அவன் சைக்கோதனமாக கொலை செய்யும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.. சரி , அவன் கெட்டவன் என நினைக்கும் போது , அவன் பேசும் வசனங்கள் அனைத்தும் தத்துவங்களாக இருப்பது மேலும் அதிர்ச்சி… இப்படி ஆடியன்ஸ் எதிர்பார்த்ததை கிளிஷேவாக கொடுக்காமல் வித்தியாசம் காட்டியதால் ஜோக்கர் அழிக்கமுடியாத கதாபாத்திரம் ஆகிவிட்டது…

உங்கள் திரைக்கதையிலும் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது இப்படி அமைப்பது , ஆடியன்ஸிற்க்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

Wednesday, 13 April 2016

திரைக்கதை டிப்ஸ் #2


புதிதாக திரைக்கதை எழுதுபவர்களின் பெரும்பாலான சாய்ஸ் , திரில்லர் டைப் தான்.. அல்லது காமெடி , காதல்... நாம் பொதுவாக செய்யும் தவறு , கதாபாத்திரங்களுக்கு பிண்ணனி , அழுத்தத்தை உருவாக்காமல் விட்டுவிடுவது.. அதாவது படம் தொடங்கி பத்தாவது நிமிடத்தில் ஆடியன்ஸ் , முக்கிய கதாபாத்திரத்தோடு ஒன்றி விட வேண்டும். அது அழுதால் இவர்களும் அழ வேண்டும்... அப்படி...

இங்குதான் பலரும் தடுமாறும் கட்டம்... உணர்வுபூர்வமாக எழுதாமல் , கடனே என்று ஒரு காதல் , மோதலை அமைப்பது.. இதனால் ஆடியன்ஸ் படத்தோடு  ஒன்றாமல் செல்போனை பார்க்க வைத்துவிடுகிறோம்..

இதனை தவிர்க்க , இதுவரை நீங்கள் பார்த்த கேட்ட சம்பவங்களில் இருந்து உணர்வுபூர்வமான முடிச்சுகளை  அமையுங்கள்.. கவனம் .. அது உங்களுக்கு மட்டும் அல்ல , பல பேரும் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளாக இருப்பது அவசியம்..

உதாரணம் :-

1. ஒரு கப்பல் , பனிபாறையில் மோதி மூழ்குகிறது. ஹீரோ தப்பிகிறான் என்பது பழசு.. ஏழை இளைஞன் , நிச்சயிக்கப்பட்ட பணக்கார ஹீரோயினை காதலிக்கிறான். காதல் கைகூடும் போது கப்பல் மூழ்கி காதலன் இறக்கிறான்.. இது உணர்வுபூர்வமாக டச் செய்யும். (Titanic)

2. டைனோசர் உயித்தெழுவது , தட்டையான திரைக்கதை. சிறுவர்களை வெறுக்கும் மனிதனும் , சிறுவர்களும் டினோசர்களிடம் மாட்டி தப்பிப்பது புதுசு.( jurassic park -1 )

3. பண்டோரா கிரகத்தின் மீது மனிதர் படையெடுப்பு , தட்டை... மனிதனாக , அவர்களுக்கு எதிரணியிடமும் நாவியாக ஒரு காதலனாகவும் இருப்பவன்... புதுசு..( avatar )

இன்னும் பல உண்டு... ஒரு மூன்றாவது நபராக நினைத்துக்கொண்டு உங்கள் திரைக்கதையை படியுங்கள்.. இப்போது உங்களை நீங்களே கேளுங்கள் .. இதில் உணர்வுபூர்வமான முடிச்சு உண்டா ?

தொடரும்...

Monday, 11 April 2016

திரைக்கதை டிப்ஸ் - #1

இந்த பதிவில் , துணை கதாபாத்திர வடிவமைப்பை பற்றி பார்க்கலாம்.

நாம் துப்பறியும் கதையோ , காதல் கதையோ எதுவாயினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்போம். ஆடியன்ஸின் கவனம் , அந்த முக்கிய கதாபாத்திரத்தில் தான் இருக்கும்.. திடீரென அந்த கதாபாத்திரம் எதாவது சிக்கலான முடிச்சுக்கு விளக்கம் அளிக்கும்போதோ அல்லது முக்கியமான விஷயத்தை சொல்லும் போதோ ஆடியன்ஸிற்க்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது…

அதாவது , எப்படி அந்த கதாபாத்திரம் சரியான முடிவு எடுத்தது என்று … அதை தவிர்க்க அந்த முக்கிய கதாபாத்திரத்துடன் ஒரு துணை கதாபாத்திரம் உருவாக்கப்படும்.. இந்த துணை கதாபாத்திரம் எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கும் தன்மைகொண்டதாக இருக்கும்… ஆடியன்ஸ் மனதில் இருக்கும் சந்தேகங்கள் , இந்த துணை கதாபாத்திரம் வாயிலாக கேட்கப்பட்டு முக்கிய கதாபாத்திரம் வாயிலாக பதில் அளிக்கப்படும். இதனால் ஆடியன்ஸிற்க்கு தெளிவு ஏற்படும்... இதை அதிகமாக வைத்தால் ‘ ஓவர் டோஸ்’ ஆகிவிடும் ஆபத்து உண்டு… தேவையான இடத்தில் பயன்படுத்துவது நல்லது.

அடுத்த பதிவில் சுவாரஸ்யமான கதாபாத்திரம் அமைப்பது பற்றி பார்க்கலாம்

தொடரும்….

Wednesday, 30 March 2016

Batman vs Superman : dawn of justice விமர்சனம்

Batman vs Superman : dawn of justice

Warning : spoiler alert…..

இன்றைக்கு தான் இந்த படத்தை பார்த்தேன். பலரும் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள்.. அதனால் சந்தேகத்துடன் தான் இருந்தேன். ஆனால் அவர்களின் விமர்சனங்களுக்கு வந்த கமெண்டுகள் பாஸிட்டிவ்வாக இருந்ததால் , நம்ம தல பேட்மேன் கை விட மாட்டார் என நினைத்து சென்றேன்.. இனி படத்தை பற்றி பார்க்கலாம்....

இந்த படம் தெளிவாக புரிய வேண்டும் என்றால் , டி.சி காமிக்ஸ் ரசிகராக இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் ‘ மேன் ஆஃப் ஸ்டீல்’ படத்தை பார்த்திருக்க வேண்டும். பார்காதவர்களுக்கு அக்கதையின் சுருக்கம்…

கிரிப்டான் கிரகம் அழியும்போது கால்-எல் எனும் சூப்பர்மேன் , குழந்தையாக பூமிக்கு அனுப்பி வைக்க படுகிறார். இங்கே மார்த்தா என்பவரால் கண்டெடுக்கபட்டு ‘கென்ட்’ ஆக வளர்கப்படுகிறார்.. ஒரு விபத்தால் வளர்ப்பு தந்தை இறந்துவிடுகிறார். அப்போது தான் , தான் யார் என்று கென்டிற்க்கு புரிகிறது. சூப்பர்மேனாக மாறுகிறார். பத்திரிகை நிருபரான ‘லூயிஸ்’உடன் காதலும் வருகிறது. .  அதே நேரம் அழிந்த கிரகமான கிரிப்டானில் இருந்து ‘ஜெனரல் சாட்’ பூமிக்கு வருகிறான். பூமியை அழித்து , புது கிரிப்டான் கிரகமாக மாற்றும்போது , சூப்பர் மேன் வந்து காப்பாற்றுகிறார்.. இந்த சண்டையில் பல கட்டிடங்கள் சேதமடைகிறது . மக்கள் , தெறித்து சாலையில் அங்குமிங்கும் ஓடுகிறார்கள்.. பல பேர் இறக்கிறார்கள்.. இறுதியில் சாட் இறப்பதோடு படம் முடிகிறது…

நாம் மேலே பார்த்த முதல் பாகமான ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ ன் கிளைமாக்ஸில் இருந்து இரண்டாம் பாகமான ‘ பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்’ படம் தொடங்குகிறது..

கிளைமாக்ஸில் மக்கள் தெறித்து ஓடும்போது , அவர்களுடன் ‘புரூஸ் வெயின்’ம் ஓடுகிறார்… புரூஸ் வெயின் , பகலில் ஒரு பணக்கார பிசினஸ்மேன் ஆகவும் , இரவில் பேட்மேனாகவும் வலம் வருபவர்… அந்த வில்லன் சாட் , உலகை அழித்திருந்தால் கூட இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது… சூப்பர்மேன் , உலகை காப்பாற்றுகிறேன் என்று ‘ யூ டர்ன் பண்ணி , டேபிள உடைச்சி , மூக்க நொறுக்கி’ அதகளம் செய்வதை பார்த்த பேட்மேன் (புரூஸ் வெயினிற்கு) கோபம் வருகிறது… சூப்பர்மேனாக இருப்பது போக மற்ற நேரங்களில் ‘கிளார்க் கென்ட்’ஆக பத்திரிகை நிருபர் வேலை பார்க்கும் சூப்பர்மேனிற்க்கு , பேட்மேனை பிடிக்க வில்லை… ஹீரோ என்ற பெயரில் ரவுடித்தனம் செய்வதாக நினைக்கிறார்… இப்படி லேசான உரசல் , பெரும் மோதலாக மாறுகிறது…

லெக்ஸ் லூதர் என்ற தனியார் ஆயுத வியாபாரி , தொடர்ந்து சூப்பர்மேனிற்க்கு எதிராக மக்களை திருப்பி விடுகிறான்.. ஒரு கட்டத்தில் சூப்பர்மேன் தான் , தனக்கான எதிரி என்று பேட்மேன் முடிவு செய்து , லெக்ஸ் லூதரிடம் இருந்த கிரிப்டான் கல்லை திருடுகிறார்… இதனிடையில் ‘பிரின்ஸ்’ என்ற பெண்ணின் மர்மமான நடவடிக்கையும் பேட்மேன் கவனிக்கிறார்.. பேட்மேன் , சூப்பர் மேன் சண்டை மூட்டி கொண்டாலும் அதனை இன்னும் வலுவாக்க ‘ டூம்ஸ்டே’ என்ற ஏலியனை லெக்ஸ் லூதர் உயிர்பிக்கிறான்.. இந்த ஏலியன் , சூப்பர்மேனுக்கு  நிகராக சக்தி வாய்ந்தது… சூப்பர் மேனின் தாயை கடத்தி , பேட்மேனை கொல்லும் படி சூப்பர்மேனை நிர்பந்திக்கிறான் , லெக்ஸ் லூதர்… சூப்பர்மேனும் பேட்மேனும் சண்டையிட்டு இறுதியில் லூயிசின் தலையீட்டால் ஒன்றுசேர்ந்து டூம்ஸ்டே வை அழிக்க போராடுகிறார்கள்… அப்போது பிரின்ஸ் என்ற பெயரில் உலவிய ‘ வொன்டர் வுமன்’ உதவி கிடைக்கிறது… வொன்டர் வுமனும் அழிவில்லா ஆற்றல் பெற்றவர்.. முடிவில் டூம்ஸ்டே இறக்கிறது. கூடவே சூப்பர்மேன் இறக்கிறார். லெக்ஸ் லூதர் சிறையில் அடைக்கபடுகிறான்.. சூப்பர்மேனின் இறுதி சடங்கு முடிந்து எல்லாரும் சென்றபிறகு , அவருக்கான சக்தி திரும்பவருவதாக ஒரு நொடியில் காட்டி படம் முடிகிறது..அடுத்த பாகமான ‘ ஜஸ்டிஸ் லீக்’ ற்காக…

படத்தின் முக்கிய  நிறைகளை முதலில் சொல்லி விடுகிறேன்.. சந்தேகமில்லாமல் பேட்மேனாக நடித்த பென் அஃ ப்ளிக்.. !!! மற்றும் படத்தின் பிண்ணனி இசை ‘  ஹன்ஸ் சிம்மர் ‘ … வசனங்கள்.... சூப்பர்மேனை பார்த்து "உனக்கு ரத்தம் வருமா ?" என்று பேட்மேன் கேட்கும் இடம் ... அதற்கு சூப்பர்மேன் நக்கலாக சிரித்தபின் கிளைமாக்ஸில் முகத்தில் கீறி இரத்தம் வர வைப்பது பக்கா கமர்ஷியல்... செம கிளாப்ஸ் .. அதைவிட தோட்டாவால் கூட துளைக்க முடியாத இரும்பு மனிதனான சூப்பர்மேனை , பேட்மேன் பிளாக் செய்யும் காட்சி என பேட்மேன் தான் படம் முழுக்க நிறைகிறார்.. சூப்பர்ஹீரோக்களையும் மனித உணர்சிகளோடு காட்டியது அருமை...

படத்தின் நீளம் மிகப்பெரிய குறை .. கிட்டத்தட்ட  2.30 மணி  ஓடுகிறது.. தமிழ்படங்களே 2.00 , 2.15 என குறுகும் போது ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்கு இது அதிகம்… படத்தின் கிராபிக்ஸ் பட்டையைக் கிளப்பினாலும் , கிளைமேக்ஸ் சண்டை ஒளிவெள்ளதால் ஒன்றுமே புரியவில்லை.. அதேபோல் திரைக்கதை சூத்திரங்களுக்கு உட்பட்டு இடைவேளை அமைந்ததா என தெரியவில்ல.. சூப்பர்மேன் கோர்ட்டுக்கு வரும்போது இடைவேளை விட்டார்கள். ஒருவேளை நான் பார்த்த திரையரங்கு கோளாறா புரியவில்லை… கதையின் உச்சகட்டம் இடைவேளையாக வந்தால் முன்பாதி சோர்வு போயிருக்கும்… அதிகமாக கனவு காட்சிகள் வைத்தாலும் ஆடியன்ஸ் கடுப்பாவது உறுதி.. இதில் மூன்று இடத்தில் கனவு காட்சி… நாமும் ஏதோ பிரச்சினை என்று சீரியஸாக பார்க்கும்போது , தடார் என்று கதாபாத்திரம் எழுந்திருக்கும் போது , நமக்கு ‘புஸ்ஸ்ஸ்’ ஆகிறது…

மற்றபடி ‘உட்காறவே முடியல , ரொம்ப ஸ்லோ ‘ என்று இல்லை… நிச்சயமா ஒருமுறை பார்க்கலாம்…